மது அருந்த பணம் தராததால் ஆத்திரம் தோசை கல்லால் அடித்து பாட்டி கொடூர கொலை: பேரனுக்கு வலை

புழல்: மது அருந்த பணம் தர மறுத்த பாட்டியை தோசைக் கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்த பேரனை போலீசார் தேடி வருகின்றனர். சோழவரம் அருகே ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட பசுவன்பாளையம், முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுசீலா (72). ஓய் வுபெற்ற அங்கன்வாடி ஊழியர். இவரது மகன் ரங்கநாதன், வானகரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெகன் (30), கடந்த 20ம் தேதி பாட்டி சுசீலா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த ஜெகன், மீண்டும் மது அருந்த பணம் கேட்டு பாட்டியிடம் தகராறு செய்துள்ளார்.

அவர் தர மறுத்து, கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகன், சமையலறையில் இருந்த தோசை கல்லை எடுத்து, பாட்டி சுசீலாவின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில், படுகாயமடைந்த சுசீலா அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதை பார்த்த ஜெகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரத்திலேயே, சுசீலா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக பலியானார். தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார், சுசீலாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஜெகனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: