கொலை வழக்கில் சாட்சி சொல்ல வராத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை கொலை வழக்கில் சாட்சி சொல்ல வராத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்கபார். இவரது மகளை, தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கோவையை சேர்ந்த தனஞ்செயன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு கேட்டுள்ளார். அதற்கு அப்துல் கபார் மறுத்ததால் தனஞ்செயன் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து, அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 4 பேர் மீதும் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை 5வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அப்போதைய புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் விசாரணை அதிகாரியுமான ராஜசேகரன் (இவர், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்) ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி டி.வி.ஆனந்த் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் ஏ.டி.நாகேந்திரன், ஆஜராகி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் பாதுகாப்பு பணியில் இருப்பதால் அவரால் ஆஜராக இயலவில்லை என்றார். அதற்கு நீதிபதி, பலமுறை சம்மன் அனுப்பியும் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆஜராகவில்லை. அவர், பாதுகாப்பு பணியில் இருப்பதாக கூறும் காரணத்தை ஏற்க முடியாது எனக்கூறி அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Related Stories: