தமிழகத்தில் முதன்முறையாக ட்ரோனில் நெற்பயிர்களுக்கு வேப்ப எண்ணெய் தெளிக்க மாணவர்களுக்கு பயிற்சி: விஐடி வேளாண்மைத் துறை சார்பில் நடந்தது

வேலூர்: தமிழகத்தில் முதன்முறையாக விஐடி வேளாண்மைத் துறை சார்பில் நெற்பயிர்களுக்கு இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட வேப்ப எண்ணெய் ட்ரோன் மூலம் தெளிப்பதற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் இயற்கை முறையில் நெல் சாகுபடிக்கு ட்ரோன்களின் பயன்பாடு மற்றும் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் வேளாண் மாணவர்கள் இயற்கையோடு தொழில்நுட்பத்தை ஒன்றிணைந்து கற்றுக்கொண்டால் விவசாயத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

பொதுவாக விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு குறித்து வேளாண் மாணவர்களுக்கு தெரிய வருவதில்லை. விஐடியின் வேளாண்மை துறை மாணவர்கள் விவசாயத்தோடு தொழில்நுட்பத்தை பயில பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் முதன்முதலாக விஐடியில் நெற்பயிருக்கு இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட வேப்ப எண்ணெய் ட்ரோன் மூலம் தெளிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை இருக்கும்போது ஓரளவுக்கு ட்ரோன் வசதியுடன் எவ்வாறு விவசாயத்தை மேற்கொள்ளலாம் என்ற கள விளக்கமும் விவசாயிகளுக்கு கூறப்பட்டது.

‘நெல்லுக்கு, இயற்கை வேளாண்மை சாகுபடி முறைகள் மற்றும் துல்லிய பண்ணைய முறையில் ட்ரோன்களை பயன்படுத்துவது தொடர்பாகவும், தொழில்நுட்ப விவரங்கள் குறித்தும், விவசாயத்தில் ட்ரோனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற பயிற்சி வகுப்பை விஐடி வேளாண்மை துறை மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் இணைந்து நடத்தியது என்று விஐடி வேளாண்மை துறை பேராசிரியர் திருமலைக்குமார் தெரிவித்தார்.பின்னர் விஐடி வேளாண்மை துறை வெளியிட்ட தொழில்நுட்ப கையேடுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வேளாண்மை துறை மாணவர்களும் விவசாயிகளும் இயற்கை விவசாயத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் விஐடி வேளாண்மைத் துறை தலைவர் பாபு மற்றும் பேராசிரியர்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories: