கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களால் தாக்குதல்!: வலைகளை அறுத்து எறிந்து அட்டூழியம்..!!

ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 2 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு தற்போது வரை முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு, நெடுந்தீவு, தலைமன்னாரு உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 படகுகளின் கண்ணாடி முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. மீன்பிடி உபகரணங்களையும், படகுகளையும் சேதப்படுத்தினர். தொடர்ந்து அட்டூழியம் செய்த இலங்கை கடற்படையினர், வலைகளை சேதப்படுத்தி அந்த வழியாக சென்ற 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை விரட்டி அடித்தனர். இதனால் மீனவர்கள் உடைந்த படகுடன் ஏமாற்றத்துடன் துறைமுகத்திற்கு திரும்பியுள்ளனர்.

Related Stories: