ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்கிறது ஸ்விக்கி, சோமேட்டோ: 5% வரி நுகர்வோருக்கு கூடுதல் சுமையாக அமையும் எனவும் கவலை!!

டெல்லி : ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் விளக்கம் கோரி உள்ளன. செப்டம்பர் 17ம் தேதி லக்னோவில் நடைபெற்ற 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு ஜனவரி 1ம் தேதி 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. இதன் மூலம் நுகர்வோருக்கு விலை அதிகரிக்காது என்றும் உணவகங்களில் வசூலிக்கப்படும் வரி இனி ஆன்லைன் டெலிவரியின் போது வசூலிக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராத உணவகங்களுக்கும் இது பொருந்துமா என்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உணவக உரிமையாளர்கள் சந்தேகம் எழுப்பினர். இந்த நிலையில், முன்னணி உணவு சேவை நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வரி எவ்வாறு விதிக்கப்படும் என ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளன.இது அடுக்கு வரி விதிப்புக்கு வழிவகுக்குமா என்று சந்தேகம் எழுப்பியுள்ள நிறுவனங்கள் நுகர்வோரின் கைகளில் பொருள் சென்று சேரும்போது, அடக்க விலை அதிகரிக்கக் கூடும் என்று கவலை தெரிவித்துள்ளனர். வரி விதிப்பு குறித்து நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் அறியும்படி தெளிவான விளக்கம் தேவைப்படுவதாகவும் அந்நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: