வாஷிங்டன் : அமெரிக்காவில் 65 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் எனப்படும் 3வது தவணை தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிப்பதால் அமெரிக்காவில் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்களுக்கும் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.
இது குறித்து FDA எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகத்திடம் அனுமதி கோரப்பட்டது. இதனை தீவிரமாக பரிசீலித்த FDA அமைப்பு 65% வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 3வது மற்றும் கூடுதல் தவணையாக பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஹை ரிஸ்க் எனப்படும் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள இளைஞர்களுக்கும் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் கூறியுள்ளது.
2வது டோஸ் செலுத்தப்பட்ட 6 மாதங்களுக்கு பிறகு தான் பூஸ்டர் டோஸ் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று FDA தெரிவித்துள்ளது. கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்த FDA அனுமதி அளித்துள்ளதை அடுத்து இதன் மீது CDC எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இன்று வாக்கெடுப்பு நடத்த உள்ளது. கூடுதல் தவணை தடுப்பூசிக்கு CDC-இன் ஒப்புதல் கிடைத்ததும் அமெரிக்காவின் பூஸ்டர் தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் கிடைத்துவிடும்.