பெரியாறு புலிகள் சரணாலயத்தில் கேமரா மூலம் புலிகள் கணக்கெடுப்பு

கூடலூர் : கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களில் பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் தமிழக - கேரள எல்லையில் 925 சதுர கிமீ பரப்பளவில் உள்ளது. இங்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.

பெரியாறு புலிகள் சரணாலயத்தை 425 பகுதிகளாக பிரித்து, அதில் இருபுறமும் 180 டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ் உள்ள 950 கேமராக்கள் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட பணி முடிவடைந்துள்ளது. இரண்டாம்கட்ட பணி அக். 31 வரை நடைபெறும். டிச. 1 முதல் 31 வரை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும்.

புலிகள் கணக்கெடுப்பில் ஈடுபடுவோருக்கான பயிற்சி நாளை தேக்கடியில் தொடங்குகிறது. கணக்கெடுப்பு விபரங்கள் டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் வசம் ஒப்படைக்கப்படும். கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்களை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் புலிகளின் உருவ அமைப்பு, உடலில் உள்ள கோடுகளை வைத்து ஆய்வு செய்து, அடுத்து ஆண்டு ஆக. 15ல் புலிகளின் எண்ணிக்கையை வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் கடந்த முறை நடத்திய கணக்கெடுப்பில் 45 புலிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: