பட்டியலின மக்கள் குறித்து பேசிய வழக்கு: நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை:  நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீரா மிதுன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், மீரா மிதுன் 5 வாரங்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

இதேபோல் ஆண் நண்பர் சாம் அபிஷேக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், சாம் அபிஷேக்கும் பட்டியல் இனத்தை சார்ந்தவர் தான், அவரது பெற்றோர்கள் பட்டியல் இனத்தவர்கள் தான். இவர் கிறிஸ்தவ மாதம் மாறிவிட்டார். மேலும் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் உள்ளார். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு சமுதாயம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரும் 5 வாரங்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர் என்ற காரணத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படுகிறது.  இருவரும் ரூ10 ஆயிரம் இருநபர் பிணை செலுத்த வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இருவரும் காவல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்து இடவேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், தலைமறைவாக கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories: