வெட்டுக்கிளிகளால் 10 ஏக்கர் பயிர்கள் சேதம்

நல்லம்பள்ளி:  தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாகல் அள்ளி பஞ்சாயத்தில் கொங்களாபுரம், சவுளூர், குரும்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பில், சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நன்கு விளைந்துள்ள நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து வெட்டுக்கிளிகள் வந்துள்ளது. நேற்று கொங்களாபுரம் பகுதியில் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் நன்கு விளைந்திருந்த சோளப் பயிர்களை முற்றிலுமாக தின்று முடித்துள்ளது.

தகவலறிந்து வந்த பாகல் அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணைத்தலைவர் ரம்யாகுமார் ஆகியோர் பாதிப்பிற்குள்ளான பயிர்களை பார்வையிட்டனர். வெட்டுக் கிளிகளை அழிக்க மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வெட்டுக் கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: