பனாஜி: மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மராத்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே (25). இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். அவரது காதலன் சுபம் டெட்ஜ் (28) என்பவருடன் கோவா நோக்கி காரில் சென்றார். பாகா - கலங்குட்டே சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அர்போரா கிராமத்திற்கு அருகே உள்ள குறுகிய சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், அப்பகுதியில் உள்ள சிற்றோடையில் விழுந்து கவிழ்ந்தது. காருடன் சேர்ந்து நடிகையும், அவரது காதலரும் மூழ்கினர். தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் வந்தனர். சிற்றோடையில் கிடந்த கார் மற்றும் இருவரது சடலங்களையும் கிட்டத்தட்ட பல மணி போராட்டங்களுக்கு பின் மீட்டனர். கைப்பற்றப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து அஞ்சுனா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சூரஜ் கவாஸ் கூறுகையில், ‘அவர்களது குடும்பத்துக்கு தகவல் சொல்லிவிட்டோம். விபத்தில் பலியான இருவரும் அடுத்தமாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.