‘ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு’ மாநாட்டில் ரூ2120 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24 நிறுவனங்களுடன் கையெழுத்து

* 42 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: தொழில் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,120.54 கோடி  மதிப்பிலான 24 திட்டங்களுக்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலமாக 41 ஆயிரத்து 695  பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ”ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் நேற்று மாநாடு நடந்தது. இதில், ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பங்கேற்ற ஏற்றுமதி கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது: இந்தியா முழுவதும் கடந்த 20 முதல் 26ம் தேதி வரையிலான ஒரு வாரம் வர்த்தகம் மற்றும் வணிக வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் இதனை அறிவித்துள்ளார்கள். அந்த வரிசையில் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற விழாவை தமிழக தொழில்துறை அமைச்சரும், ஊரக தொழில்துறை அமைச்சரும் ஏற்பாடு செய்துள்ளார்கள். அமைச்சர்களுக்கும், துறை சார்ந்த உயரதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில் வளர்ச்சி என்பது உங்கள் துறை வளர்ச்சி மட்டுமல்ல, அது அனைத்து துறைகளின் வளர்ச்சி என்பதை உணர்ந்தவன் நான். அதுதான் இந்த மாநிலத்தின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சியாகும். தொழில்துறை வளர்கிறது என்றால் அனைத்து துறைகளும் வளர்கிறது என்று பொருள்.

எனவேதான் இதுபோன்ற மாநாடுகள், கண்காட்சிகள் தமிழகத்தில் அதிகம் நடைபெற வேண்டும். சென்னையில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நடைபெற வேண்டும்.

இன்றைய தினம் ரூ.2,120.54 கோடி  மதிப்பிலான 24 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இந்த முதலீடுகள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி என்று தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு ஏதுவாக, பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது எப்போதும் தமிழ்நாட்டின் வளர்ச்சியாக மட்டும் இருந்தது இல்லை.

அது இந்தியா முழுமைக்கும் பரந்த வளர்ச்சியாக இருந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய வளர்ச்சியாகவும் இருந்துள்ளது. உலக வர்த்தகர்களும் வணிகர்களும் ஒன்றுகூடும் இடமாக நம்முடைய தமிழ் நிலம் இருந்துள்ளது. அத்தகைய பழம்பெருமையை நாம் மீட்டாக வேண்டும். நம்முடைய தயாரிப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் நிறுவனத்தை தொடங்க வேண்டும்.  அதாவது, உலகம் முழுக்க நாம் செல்ல வேண்டும். உலகம், தமிழகத்தை நோக்கி வந்தாக வேண்டும். மொத்தத்தில் தமிழக தொழில்துறையின் உள்ளங்கையில் உலகம் இருக்க வேண்டும். அதுவே உங்களது இலக்காக அமைந்திட வேண்டும்.

இந்திய அளவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ரூ1.93 லட்சம் கோடி ஏற்றுமதியுடன்,  இந்தியாவிலேயே  தமிழ்நாடு மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கி வருகிறது. 2020-21ம் ஆண்டிற்கான அகில  இந்திய  அளவிலான ஏற்றுமதியில்,  தமிழ்நாட்டின்  பங்களிப்பு 8.97 சதவீதம். மோட்டார் வாகன உற்பத்தியில், தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. ஆடை மற்றும் அணிகலன்கள் ஏற்றுமதியில் 58 சதவீதம் பங்களிப்பு தருகிறது. காலணி ஏற்றுமதியில் 45 சதவீதம் பங்களிப்பு தருகிறது. மின்னணு இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் 25 சதவீதம் பங்களிப்பு அளித்து வருவது மிகவும் பெருமைக்குரியது. இந்த விழுக்காடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகி வர வேண்டும்.

வேலூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து தோல் பொருட்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் இருந்து  ஜவுளி, சென்னையில் இருந்து  மோட்டார் வாகன பொருட்கள் என்று  பரவலான வகையில் சீராக ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக வர்த்தக தரத்துக்கு ஏற்றவகையில் மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அதன் மூலமாகத்தான் ஏற்றுமதி பெருகும். அதனால்தான் வேலைவாய்ப்பும் பெருகும். இது மாநிலத்துக்கும் வருமானம் ஈட்டித் தரும். இத்தகைய சுழற்சி அடிப்படையில் முன்னேற்றம் அமைய வேண்டும். தமிழ்நாடு என்றாலே மோட்டார் வாகனங்கள், ஜவுளி - ஆடை அணிகலன்கள், தோல் பொருட்கள், காலணிகள் ஆகியவற்றின் தயாரிப்பில் எப்போதும் முன்னேற்றம் இருக்கும்.

அந்த வரிசையில் மின் வாகனங்கள், மின்சக்திக் கலன்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணுவியல்,  உணவு பதப்படுத்துதல், வான்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளும் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் தமிழ்நாட்டுக்கான ஏற்றுமதி திறன் கூடுதல் ஆகும். தமிழ்நாட்டின் தனித்தன்மையான பொருட்கள் என்று ஏராளமாக இருக்கிறது. அதற்கு உலகளாவிய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. காஞ்சிபுரம் மற்றும் ஆரணி பட்டுச்சேலைகள், சின்னாளப்பட்டி சுங்குடிச் சேலைகள்,  கோயம்புத்தூர் கிரைண்டர்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் - தட்டுகள், சுவாமிமலை சிற்பங்கள், பவானி ஜமக்காளம், பத்தமடை பாய்கள், மதுரை மல்லி, மாமல்லபுரம் கற்சிற்பங்கள், திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழைப்பழம் என புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வெளிநாடுகளில், இந்த பொருட்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.  இவற்றை அதிகமாக தயாரிக்க வேண்டும். 2030ம் ஆண்டிற்குள்  1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு  அடைந்திட வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துள்ளோம். இதை அடைய வேண்டுமெனில், தற்போது 26 பில்லியன் அமெரிக்க  டாலராக  இருக்கும்  மாநிலத்தின் ஏற்றுமதியை, 2030ம் ஆண்டிற்குள் 100  பில்லியன் அமெரிக்க  டாலராக உயர்த்திட வேண்டும்.  உலக வர்த்தக வரைபடத்தில், தமிழ்நாடு மிகப்பெரும் வளர்ச்சி பெறுவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அல்லும் பகலும் உழைத்து வருகின்றோம், இந்த லட்சியத்தை அடைவதற்கு, பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஒன்றிய அரசின் வணிகத்துறை கூடுதல் செயலாளர் சஞ்சய் சத்தா, தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர்  அருண் ராய் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர். தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்றார். ஒன்றிய வர்த்தக துறையின் கூடுதல் இயக்குநர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார்.

42 கண்காட்சி அரங்குகள்

சென்னை கலைவாணர் அரங்கில் 21 ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பங்கேற்ற ஏற்றுமதி கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிட்டார்.  இந்த கண்காட்சியில், தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை காட்சிப்படுத்திய 42 கண்காட்சி அரங்குகள் வைக்கப்பட்டு இருந்தது. அதில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கார்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஆடை-ஆபரணங்கள், காலணிகள், தோல் பொருட்கள், சாமி சிலைகள், பூஜை பொருட்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களும் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

‘தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை’யை வெளியிட்டதில், பெருமகிழ்ச்சி அடைகிறேன். மாநிலத்தில் இருந்து ஏற்றுமதியை மேலும்  மேம்படுத்த, தலைமை செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதேபோல், குறு சிறு மற்றும் நடுத்தர  நிறுவனங்களுக்கு வழிகாட்டும் “குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி  நிறுவனங்களுக்கான கையேடு”இன்று வெளியிடப்பட்டுள்ளது. தென்  தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளித்திட, தூத்துக்குடியில், ஏற்றுமதியை மையமாக கொண்ட “சர்வதேச அறைகலன் பூங்கா”ஒன்று, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு  வருகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஏற்றுமதி  திட்டங்களை கண்காணிக்க ஒரு பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதிகள் தொடர்பான இடர்பாடுகள் களைதல், அனுமதிகள் பெற்றுத் தருதல் ஆகிய  பணிகளை மேற்கொள்ள வழிகாட்டி நிறுவனத்தில், ஏற்றுமதி அமைப்பு ஒன்று  உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான உலகத்தரம் வாய்ந்த  உள்கட்டமைப்பு வசதிகளுடன், மாநல்லூரில் 6000 ஏக்கர் பரப்பளவிலும், தூத்துக்குடியில் 5000 ஏக்கர் பரப்பளவிலும் சிப்காட் நிறுவனம்  மூலம் 2 பொருளாதார வேலைவாய்ப்பு பகுதிகளை உருவாக்கவும் அரசு  திட்டமிட்டுள்ளது.

திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோவை மற்றும்  ஓசூர் ஆகிய 10 ஏற்றுமதி மையங்கள்  மேம்படுத்தப்பட உள்ளன. ஏற்றுமதியாளர்கள் மதிப்பு கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, தொகுப்பு சலுகைகள்  வழங்க ஒரு திட்டம் வடிவமைக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

தேனி, திண்டிவனம், மணப்பாறையில் உணவு பூங்கா

ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உலக அளவில் சந்தைப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாவட்ட ஏற்றுமதி மையங்கள்”உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு, தோல் தொழில் துறைக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவமும், ஆதரவும் அளித்து வருகிறது. தமிழ்நாட்டில், ரூ406.06 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் 10 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மேம்பாட்டு திட்டத்திற்காக, 15 சதவீதம் மானியம் என்ற அளவில் ரூ60.91 கோடி மானியம் வழங்கிட, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பருத்தி, பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீது விதிக்கப்படும் 1% சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டும் என நெசவாளர்கள், தொழில்முனைவோர், நூற்பாலைகள், பஞ்சு உற்பத்தியாளர்கள்,  வியாபாரிகள் ஆகியோர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த 1% சந்தை நுழைவு வரியை நாங்கள் தற்போது நீக்கி உள்ளோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.  இதன் விளைவாக, இந்திய பருத்தி கார்ப்பரேஷன், தற்போது சேலம், மதுரை, கோயம்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் பஞ்சுக்  கிடங்குகள் அமைத்திட முன்வந்துள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்தின்  வளர்ச்சி மற்றும் சேவைகளின் மூலமாக, உலக வர்த்தகம் முன்னெப்போதையும் விட, பன்மடங்கு பெருகி வருகின்றது. இது நம் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு  மிகப்பெரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் M-TIPB நிறுவனம், பிலிப்கார்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. காவிரி டெல்டா பகுதியில் வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்க திருச்சி - நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதி வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருவழித்தடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, மணப்பாறை மற்றும் திண்டிவனம் ஆகிய 3 இடங்களில் உணவு பூங்காக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.  “வேளாண் ஏற்றுமதி சேவை மையமும்” உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தையும் செயல்படுத்தும்போது தமிழ்நாடு அடையும் வளர்ச்சி என்பது இந்தியாவிலேயே சிறந்ததாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Related Stories: