மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவு அழகாபுரிபட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மனைவி சங்கீதா (33). மேலவளவு ஊராட்சி மன்ற துணைத்தலைவியான இவர், கடந்த வாரம் கச்சிராயன்பட்டி பரமாண்டி தோப்பின் அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் கணவருடன் கலந்து கொண்டார். பின்னர் இருவரும் அங்கு யாக குண்டத்தில் போடப்பட்ட காசை, சிறிது சாம்பலுடன் சேர்த்து எடுத்து பொட்டலமாக மடித்து, டூவீலரில் வைத்து எடுத்துக் கொண்டு ஊர் திரும்பினர். சாலக்கிபட்டி அருகே வந்த போது, சாம்பலில் இருந்து நெருப்பு பற்றி டூவீலரின் ஒரு பகுதி மற்றும் சங்கீதாவின் சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த இவர், மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சங்கீதா உயிரிழந்தார்.