போதை பொருள் கடத்தல் கும்பல் அட்டகாசம் சேலத்தில் சோதனை சாவடியை உடைத்து தப்பிய கார்

சேலம்: பெங்களூரில் இருந்து சேலத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் அதிகாலை 2 மணிக்கு கருப்பூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஓமலூரில் இருந்து பயங்கர வேகமாக வந்த காரை போலீசார் தடுத்தனர். என்றாலும் தடுப்பு கட்டையை உடைத்துக்கொண்டு அந்த கார் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்நிலையில் அந்த கார் நேற்று கொண்டலாம்பட்டியில் அனாதையாக நின்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் பதிவு எண் கொண்ட அந்த கார் யாருடையது என்று போலீசார் விசாரிக்கின்றனர். அதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி சென்ற நபர்கள், போலீசார் துரத்தியதால் பொருட்களை பதுக்கி வைத்துவிட்டு, காரை நிறுத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: