திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட
அலுவலகத்தை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று
தொடங்கி வைத்து பேசியதாவது:
10 ஆயிரம் கிலோ மீட்டர் கிராம சாலைகள்,
நெடுஞ்சாலைகளின் தரத்துக்கு கொண்டு வரப்படும். மக்களுக்கு பயனளிக்கும் 10
ஆயிரம் கி.மீ. கிராம சாலைகளை, உள்ளாட்சி மூலம் தேர்ந்தெடுத்து அனுப்புமாறு
அனைத்து கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறோம். விரைவில் அந்த
பணிகள் தொடங்கும்.
இதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள
நகரங்கள் மற்றும் பேரூர்களில் புறவழிச்சாலைகள் அமைக்க கணக்கெடுக்கும் பணி
நடக்கிறது. எனவே, சாலை விரிவாக்கம், புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிக்காக
நிலம் கையகப்படுத்தும்போது ஏற்படும் இடர்பாடுகளை தீர்க்க எம்எல்ஏக்கள்
மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும். நெடுஞ்சாலைத்துறைக்கு
நிலம் எடுக்க சுப்ரீம் கோர்ட் அனுமதித்திருக்கிறது. நிலத்திற்கான வழிகாட்டு
மதிப்பீடு தொகையை, இழப்பீட்டை நியாயமாக கேட்டுப்பெறலாம். இவ்வாறு அவர்
பேசினார்.