வேலூர்: மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், லேப்டாப் உள்ளிட்டவற்றை வேலூர் நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் போலீசார் ஒப்படைத்தனர். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி 2016ம் ஆண்டு முதல் 2021 வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அவரின் சொத்து மதிப்பு 654 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அதன்பேரில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள கே.சி.வீரமணியின் வீடு, கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் ஏலகிரிமலையில் உள்ள ஓட்டல் ஹில்ஸ் ஆகிய இடங்கள் உட்பட மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர்.