புதுடெல்லி: ‘கடந்த பிப்ரவரியில் ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள், டிஜிட்டல் ஊடகங்களின் சுதந்திரத்துக்கு எதிரானது,’ எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் கர்நாடக இசை கலைஞர் டிஎம் கிருஷ்ணா, டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர் சங்கம் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவில், ‘புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைக்கு எதிராக, பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. அந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். இந்த வழக்குகளில் உயர் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கவும் தடை விதிக்க வேண்டும்,’ என கோரப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தது. ஒன்றிய அரசின் கோரிக்கையையும் நிராகரித்தது.