சென்னை: உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் வசதிக்காக, பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில் மரக்கன்று நடும் விழாவில் நேற்று பங்கேற்ற பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: நீட் தேர்வில் என்ன நடக்கிறது என்பது தெரியும். கேள்வித்தாள் வெளியானது, விலை கொடுத்து கேள்வித்தாள் வாங்கிய விவகாரங்கள் எல்லாம் வெளியில் வந்துள்ளது. அறிவு சார்ந்த படிப்பை படிக்கும் போது எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதுதான் நமது முதல்வரின் விருப்பமாக உள்ளது. இதற்காகத்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.