புதுடெல்லி: பாரத் பயோடெக் நிறுவனம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், குழந்தைகளுக்கான தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையை நிறைவு செய்துள்ளது. இதற்கான அறிக்கையை ஒன்றிய அரசிடம் அடுத்த வாரம் தாக்கல் செய்கிறது. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 80 கோடி டோசுக்கு மேல் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அடுத்ததாக குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த ஐதாராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், குழந்தைகளுக்கான தனது தடுப்பூசியை 3 கட்டங்களாக பரிசோதித்து வருகிறது. இதில், இறுதிக்கட்ட சோதனை தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.