'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” - தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து “வர்த்தகம் மற்றும் வணிக வாரம்” நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75வது வருடத்தை முன்னிட்டு நடத்துகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கவும் மற்றும் விழா பேருரையாற்றவும் இசைவு அளித்துள்ளார்கள்.  

உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக துவக்க விழா, கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை அமையவுள்ளன. கண்காட்சியில் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது பொருட்களை காட்சிப்படுத்த உள்ளன.   இக்கண்காட்சி பொது மக்களுக்காக செப்டம்பர் 22, 2021 அன்று மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை திறந்து இருக்கும்.

துவக்க விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் “தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை” மற்றும் “குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு” ஆகியவற்றை வெளியிடுவார்.  இந்நிகழ்வில் பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட உள்ளன. இவ்விழாவில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு ஊரக தொழில் துறை  அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் திரு. வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஒன்றிய அரசின் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு. சஞ்சய் சத்தா,

தமிழ்நாடு அரசின் தொழில் துறை முதன்மைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர்  திரு. வி. அருண் ராய், இ.ஆ.ப.,  ஒன்றிய வர்த்தகத் துறையின் கூடுதல் இயக்குநர் திரு. சண்முகசுந்தரம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: