மாஸ்க் அணியாமல் வந்ததால் அபராதம்; தலைமை காவலர் மீது தாக்குதல்: பீகார் வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். மாஸ்க்  அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை ஏழுகிணறு காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநரும் தலைமை காவலருமான உதயகுமார், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரனுடன் தங்கசாலை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது, மாஸ்க் அணியாமல் வந்த பீகாரை சேர்ந்த  முகமது அப்துல்லா (27)  என்பவரை மடக்கி வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனால் முகமது அப்துல்லாவுக்கும், ஏட்டு உதயகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவரிடமிருந்து அபராத தொகை 200 ரூபாய் வசூலித்துள்ளார். முகமது அப்துல்லாவுக்கு  மாஸ்க் கொடுத்து அணிந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமது அப்துல்லா, அபராத தொகை செலுத்திவிட்டேன். எதற்காக மாஸ்க் அணியவேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால், தலைமை காவலர் உதயகுமாரின் செல்போனை பிடுங்கியும், அவரது சட்டையை பிடித்து இழுத்தும் தாக்கியுள்ளார். இதனால் தலைமை காவலரின் சீருடை கிழிந்தது. இதையடுத்து அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மாஸ்க் அணியாமல் சென்றது, மிரட்டல் விடுத்தது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் முகமது அப்துல்லா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: