டெல்லி: குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி, வேலையின்றி பரிதவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி உள்ளிட்ட 7 அம்சங்கள் கொண்ட தேர்தல் வாக்குறுதியினை கோவாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அங்கு ஆளும் பாஜக கட்சியை வீழ்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக கோவா தலைநகர் பனாஜி சென்ற ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோவா சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றால் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசியல் வாதிகள் கொள்ளையடிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.