×

ரேஷன் கடையில் பொதுமக்களை அலைக்கழிக்கக்கூடாது: மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் அத்தியாவசிய பொருள் விநியோகத்தில் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது எனவும் அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையானது அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலமாக விரல் கைரேகை பெற்று அதன் மூலமாக பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களானது வழங்க வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் நேரடியாக வந்து பொருட்களை வாங்க முடியாத பட்சத்தில் மாற்றாக வேறொருவர் வந்து வாங்குவதற்கு அத்தாட்சி கடிதமானது வழங்க வேண்டும். அந்த கடிதத்தை காண்பித்து அவர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஒருசில ரேஷன் கடைகளில் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார்கள் வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களை அலைக்கழிக்கக்கூடிய ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அங்கிருக்கக்கூடிய அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கடிதத்தின் வாயிலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : ration shop
× RELATED ஆசிரியரை கடத்தி பணம் பறிப்பு: சென்னை...