மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகும் திமுக வேட்பாளர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்!!

சென்னை:மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் இரண்டு திமுக வேட்பாளர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய இருவரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தங்களது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது. காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கடந்த 15ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 22ம் தேதி (நாளை) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 23ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறம். வேட்புமனு வாபஸ்பெற 27ம் தேதி மாலை 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவை, சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளரும் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என கட்சி தலைமை கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, திமுக வேட்பாளர் 2 பேரும் இன்று மதியம் 12 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.  அப்போது திமுக எம்பிக்கள் கனிமொழி, என்.ஆர்.இளங்கோவன், திருச்சி சிவா, வில்சன் மற்றும் அமைச்சர் கே.என். நேரு, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்  உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.இவர்களின் வேட்புமனுக்களை தலா 10 திமுக எம்எல்ஏக்கள் முன்மொழிந்து இருந்தனர். தற்போது திமுக எம்எல்ஏக்கள் அதிக பலத்துடன் இருப்பதால் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.

கடந்த 5 நாட்களாக அரசியல் கட்சிகள் சார்பில் யாரும் மனு தாக்கல்  செய்யவில்லை. சுயேட்சை வேட்பாளராக, சேலம் ஆத்தூரை சேர்ந்த தேர்தல் மன்னன்  பத்மராஜன் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம்  வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுவை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய  வேண்டும். இவருக்கு ஒரு எம்எல்ஏ கூட முன்மொழியவில்லை. இதனால் வேட்புமனு  பரிசீலனையின்போது அவரது மனு நிராகரிக்கப்படும். ஆனாலும், அதிக தேர்தலில்  போட்டியிட மனு தாக்கல் செய்வதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்  பெறுவதற்காகவே சுயேட்சை வேட்பாளராக பத்மராஜன் மனு தாக்கல் செய்துள்ளார். அதனால், திமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களே போட்டியின்றி வெற்றிபெறுவார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 27ம் தேதி மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்.

திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி, திமுகவின் ஆரம்ப கால தலைவரான வி.என்.நடராஜனின் மகன் என்.வி.என்.சோமுவின் மகள் ஆவார். என்.வி.என்.சோமு 1996ல் வடசென்னையில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒன்றிய பாதுகாப்புதுறை இணை அமைச்சராக இருந்தார். ராணுவ முகாமிற்கு ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் கனிமொழி 2016ல் தி.நகர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். ஆவார். இவர் தற்போது திமுக மருத்துவர் அணி மாநில செயலாளராக உள்ளார்.

எம்பி பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் வருகிற 29.6.2022 வரை உள்ளது. இந்த இடத்திற்கு திமுக வேட்பாளர் ராஜேஷ்குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் இன்னும் 9 மாதங்கள் பதவியில் இருக்க முடியும். கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் 2.4.2026 வரை இருக்கிறது. எனவே இந்த இடத்துக்கு தேர்வு செய்யப்படுபவர் 4 ஆண்டுகள், 6 மாதம் பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்துக்கு திமுக வேட்பாளர் கனிமொழி சோமு மனுதாக்கல் செய்துள்ளார்.

Related Stories: