×

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண். வளர்ச்சி திட்டம் விவசாயிகள் விவரம் சேகரிப்பு பணி தீவிரம்-கோட்டூர் வட்டார வேளாண். உதவி இயக்குனர் தகவல்

மன்னார்குடி : கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு விவசாயிகளின் விவரம் சேகரிப்பு பணி மும்மூரமாக நடந்து வருவதாக கோட்டூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு அடிப்படை விவரம் சேகரிக்கும் பணிகளில் ஒரு பகுதியாக விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோட்டூர் அடுத்த செருகளத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து கோட்டூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன் பேசுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒரு ங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்த நடப்பாண்டில் கோட்டூர் வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளின் அடிப்படை விவரம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கிராம திட்ட செயலாக்கத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் தனியே நியமிக்கப்பட்டுள்ளனர். வேளாண்மை துறையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள திட்டங்களான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், தார்பாலின் போன்றவை 50 சத மானிய விலையில் வழங்குதல், கூட்டு பண்ணையம் அமைத்தல், நுண்ணீர் பாசன திட்டம், துணை நீர் மேலாண்மை திட்டம், தென்னை சாகுபடி மேம்படுத்தும் திட்டங்களை விளக்கி பேசினார்.

வேளாண்மை பொறியியல் துறையின் திட்டங்கள் குறித்து உதவி பொறியாளர் திவ்யாவும், தோட்டக் கலைத் துறையின் திட்டங்கள் குறித்து உதவி தோட்டக்கலை அலுவலர் இளங்கோவனும் பேசினர். விதைச்சான்று அலுவலர் முருகேசன் அங்கக வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்து பயிற்சி வழங்கினார்.

மாவட்ட கவுன்சிலர் கலைவாணி மோகன் பேசுகையில், மக்களை தேடி வரும் இதுபோன்ற திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டத்தில் மேலும் பல சிறப்பம்சங்கள் சேர்க் கப்பட்டு அரசாணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். அட்மா திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்து பயிற்சியும் மன்னார்குடி தாயார் நிறுவனத்தின் மூலம் நுண்ணீர் பாசன கருவிகள் கண்காட்சியும் கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம்இ விஏஓ சுதந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை வேளாண்மை அலுவலர் சண்முகசுந்தரம் வரவேற்றார். உதவி வேளாண்மை அலுவலர் துர்கா நன்றி கூறினார்.

Tags : Kottur Regional Agriculture , Mannargudi: Farmers' data collection work is in full swing for the artist's All Village Integrated Agricultural Development Program.
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி