நாகை அருகே பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் பலகோடி ரூபாய் மதிப்பிலான பண்ணை வீடு அபகரிப்பு!: அதிமுக பிரமுகர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு..!!

நாகை: நாகை அருகே பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றுபவருக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்பிலான பண்ணை வீட்டை அபகரித்துவிட்டதாக அதிமுக பிரமுகர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் திருமருகல் அருகே அம்பல் கிராமத்தை சேர்ந்தவர் ராணி, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரான இவரது கணவர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்து வீர மரணம் அடைந்தவர். அவரது நினைவிடத்தை தனது சொந்த கிராமத்தில் அமைத்த ராணி, ஆண்டுதோறும் நினைவுநாளான்று அம்பல் கிராமத்திற்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கும்.

பல கோடி ரூபாய் மதிப்பிலான பண்ணை வீட்டையும், தோட்டத்தையும் பாதுகாக்க கொங்கராயநல்லூர் பகுதியை சேர்ந்த சத்யன் என்பவரை பணியமர்த்தியுள்ளார் ராணி. ஒருகட்டத்தில் சொத்துக்காக ஆசைப்பட்ட சத்யன், சில ஆண்டுகளுக்கு முன்பு ராணியை மந்திரவாதி ஒருவரிடம் அழைத்து சென்று மூளை சலவை செய்து சொத்துக்களை எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்து பிரான்சில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய ராணி, தனது பண்ணை வீட்டையும், தோட்டத்தையும் சத்யன் அபகரித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது அடியாட்களுடன் வந்து வீட்டை சூறையாடி சொகுசு கார்களை சத்யன் திருடி சென்றதாக ராணி புகார் கூறுகிறார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சத்யன், அவருக்கு உடந்தையாக இருந்த திருமருகல் ஒன்றிய அதிமுக துணை சேர்மன் திருமேனி உள்ளிட்ட 6 பேர் மீது திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: