ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்: விமானம் மூலம் திருப்பி அனுப்பி வருகின்றனர்

புளோரிடா: அமெரிக்காவில் தஞ்சமடைந்த ஹைத்தி அகதிகள் விமானம் மூலம் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பகுதி டெல்ரியோ எல்லையையடுத்து மெக்சிகோ நாடு தொடங்குகிறது. இந்த எல்லைப்பகுதியில் ஒரு ஆறு பாய்கிறது. இதன் ஒரு பகுதி அமெரிக்கா பக்கமும், ஒரு பகுதி மெக்சிகோ பக்கமாகவும் உள்ளது. இந்த ஆறுவழியாக மெக்சிகோவில் இருந்து பலர் அமெரிக்காவுக்குள் நுழைந்து விடுகின்றனர். இதை தடுப்பதற்காக தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ‘மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் தஞ்சம் புகுவதற்கு ஹைத்தி மற்றும் பெரு நாட்டை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் டெல்ரியோ பாலத்துக்கு அருகே குவிந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து இவர்கள் அமெரிக்காவில் நுழையாதபடி எல்லையில் பலத்த பாதுகாப்பை அமெரிக்க போட்டுள்ளது. இதனால் ஹைத்தி அகதிகள் அங்குள்ள பாலத்துக்கு கீழ் தங்கியுள்ளனர்’. ஆனால் அகதிகள் வருகை அதிகரித்தால் சமாளிக்க முடியாத அமெரிக்கா அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்தது. மேலும் அங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டமாக குவிந்து இருப்பதால் கொரோனா தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப அமெரிக்கா தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. அகதிகள் அனைவரையும் விமானம் மூலம் அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறார்கள். மேலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் எல்லையில் இருப்பதால் விமானங்களை அதிகமாக இயக்கி அவர்களை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ரோந்துப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ஹைத்தியை சேர்ந்்த அகதி ஒருவர் கூறுகையில், ‘ஹைத்தியில் பிழைக்க வழியில்லை. பாதுகாப்பும் இல்லை. அமெரிக்கா எங்களை ஏற்காவிட்டால் மெக்சிகோவிலேயே தங்கி வாழ முயற்சிப்போம்’ என்றார்.

Related Stories: