திருவனந்தபுரம்: கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடிக்கு இருவர் உரிமை கோருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசாக ரூ. 12 கோடி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் குலுக்கல் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் கேரள நிதியமைச்சர் பாலகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் பரிசான ரூ.12 கோடி வயநாடு மாவட்டம் பனமரம் பகுதியை சேர்ந்த செய்யது அலவி(45) என்பவருக்கு விழுந்ததாக தகவல் வெளியானது. துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் பணி புரிந்து வரும் இவர் சில நாட்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் உள்ள நண்பருக்கு கூகுள் பே மூலம் ரூ.300 அனுப்பி லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளார்.
செய்யது அலவிக்காக இவரது நண்பர் எடுத்த அந்த லாட்டரிக்குதான் முதல் பரிசு கிடைத்ததாக கூறப்பட்டது. ஆனால் நேற்று இரவு திடீர் திருப்பமாக கொச்சி மரடு பகுதியை சேர்ந்த ஜெயபாலன் என்ற ஆட்டோ டிரைவர் தனக்கு தான் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளதாக கூறினார். டிக்கெட்டை வீட்டுக்கு அருகில் உள்ள கனரா வங்கியில் டெபாசிட் செய்து விட்டதாக கூறிய அவர் அதற்கான சான்றிதழை காட்டினார். லாட்டரியில் விழுந்த முதல் பரிசு ரூ.12 கோடிக்கு இருவர் உரிமை கொண்டாடுவதால் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.