கங்காவரம் துறைமுகத்தில் ஆந்திர அரசின் பங்கையும் வாங்கும் அதானி நிறுவனம்

புதுடெல்லி: குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானி தலைமையிலான அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகம் உட்பட குஜராத், கோவா, கேரளா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்நாட்டு துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது. அந்த வகையில், ஆந்திராவின் கங்காவரம் துறைமுகத்தின் 31.5 சதவீத பங்குகளை சுமார் ரூ.2000 கோடிக்கு கடந்த மார்ச்சில் அதானி நிறுவனம் வாங்கியது. இத்துறைமுகத்தில் மீதமுள்ள பங்கில் 10.4 சதவீத பங்குகளை ஆந்திரா அரசு வைத்திருந்தது.

தற்போது இந்த பங்குகளையும் வாங்க அதானி நிறுவனம் முயற்சி செய்கிறது. ஆந்திர அரசிடமிருந்து 10.4 சதவீத பங்குகளை அதானி நிறுவனம் வாங்க இந்திய தொழிற்போட்டி ஆணையம் நேற்று அனுமதி வழங்கியது. மீதமுள்ள 58.1 சதவீத பங்குகளை டிவிஎஸ் ராஜூ குழுமம் வைத்துள்ளது. எனினும், துறைமுகத் தொழிலில் டிவிஎஸ் ராஜூ குடும்பம் பெரிதாக ஆர்வம் காட்டாததால், ஒட்டுமொத்த துறைமுக நிர்வாகமும் அதானி கட்டுப்பாட்டிற்கு போவது தடுக்க முடியாத ஒன்று என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: