திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ராமலிங்கம்(53) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருவள்ளூர் பெரியகுப்பம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆகாஷ்(22). இவர், நேற்று முன்தினம் இந்த நிறுவனத்துக்கு பைக்கில் வந்து, ஹார்ன் அடித்து கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கம், `எதற்காக ஹார்ன் அடிக்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகாத வார்த்தையால் ராமலிங்கத்தை ஆகாஷ் திட்டியுள்ளார். பின்னர் ராமலிங்கத்தின் கழுத்தில் கத்தியை வைத்து, பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து, மணவாளநகர் போலீசில் ராமலிங்கம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.