துரைப்பாக்கம்: திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (35) பெயின்டர். இவர் கடந்த 2012ம் ஆண்டு திருவான்மியூர் சிக்னல் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு சம்மந்தமாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவான்மியூரை சேர்ந்த ராஜேஷ் (41) பாலாஜி (39) ஆகிய இருவரையும் தேடி வந்தனர். ஆனால், போலீசில் சிக்காமல் 8 வருடங்களாக தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் அரும்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக திருவான்மியூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், ராஜேஷ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 2 கொலை வழக்கு, 3 கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.