மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த ஏற்பாடு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சேலம்: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்தில் நகருக்குள் வனம் திட்டம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டங்களை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (20ம்தேதி) தொடங்கி வைத்தார். தொடர்ந்து சீலாவாரி ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறியதாவது: 2018ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலுக்கான அரசாணையை முன்னாள் ஆட்சியாளர்கள் வெளியிட்டனர். வார்டுகள் மறுவரை செய்யப்படும் என்று தெரிவித்தனர். தற்போது திமுக ஆட்சியில் 6 மாநகராட்சிகள், 29 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வார்டுகள், வாக்காளர்கள் எண்ணிக்கை மாறுபடுவதால் மறுவரை செய்யப்படுகிறது. வார்டுகள் மறுவரை செய்து அறிவிக்க 15 முதல் 20 நாட்களாகும். அறிவித்த பிறகு நூறு நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும்.

மறுபடியும் அறிவிக்கும்போது 30 நாட்கள் காலஅவகாசம் வேண்டும். இவற்றை விரைவாக முடித்து தேர்தல் நடத்த வேண்டும் என்று முதல்வர் உறுதியாக சொல்லி இருக்கிறார். அதிகாரிகள் அதற்கான வேலையை செய்து கொண்டு இருக்கின்றனர். எப்போது தேர்தல் என்பதை தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டும். விரைவில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

Related Stories: