ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவு; அதிமுகவை எச்சரிக்கும் வகையில் வெளியிடப்பட்டதா?.. தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக தனித்து போட்டியிடுவதாக திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிரடியாக அறிவித்தது. கடந்த தேர்தலின் போது அதிமுகவினர் ஒத்துழைப்பு தரவில்லை.

சொந்தக் கட்சிக்காரர்களை கூட கட்டுப்படுத்த அதிமுக தலைவர்களால் முடியவில்லை. அவர்களுடன் கூட்டணி வைத்தால் நாம் வெற்றி பெற முடியுமா?. தற்போது உள்ள சூழ்நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்தால் நமக்கு சரி வராது. குறிப்பிட்ட சீட் கிடைக்காது அதனால் தனத்தே போட்டியிடலாம் என்று முடிவு எடுத்ததாக பாமக தரப்பில் விளக்கம் தரப்பட்டது. பாமக கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாமக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதால் எந்த இழப்பும் இல்லை என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் அதிமுகவில் உள்ள சில தலைவர்கள் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் மறைமுகமாக அழைப்பு விடுத்தனர். அதே நேரத்தில் பாஜக பொதுசெயலாளர் கரு.நாகராஜன், ” பாமக மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” LOCAL- UNDER- STANDING” என்று பதிவிட்டு அதனை அழித்துள்ளார். மேலும், UNDERSTAND? புரிஞ்சுதா? என்றும் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு புதிய பிரச்னையை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சி ேதர்தல் முடிவு என்பது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாமக தலைவர்கள் எடுத்த முடிவு. புரிந்தததா? என்ற கோணத்தில் அவர் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகவினர் மீண்டும் கூட்டணிக்கு வாருங்கள் என்று ரகசியமாக அழைப்பு விடுப்பதை எச்சரிக்கை விடுக்கும் வகையில் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. திரும்ப, திரும்ப அழைக்க வேண்டாம் என்ற விதத்தில் இதனை பதிவிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ராமதாஸின் பதிவு, ” புரிந்தவர்களுக்கு புரிந்து இருக்கும்” என்ற கோணத்தில் பதிவிட்டுள்ளதாக பாமகவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: