8 மாதங்களுக்கு பிறகு ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க வெளிமாநில பக்தர்களுக்கும் அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சுவாமியை தரிசிக்க வெளி மாநில பக்தர்களும் இன்று முதல் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்றிரவு முதலே ஏராளமான பக்தர்கள் இலவச டிக்கெட் பெற காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதன்படி ஊரடங்கு அமல்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு இருந்தது. இதனால் வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.

ஆனால் கோயில்களில் வழக்கமாக நடக்கும் பூஜைகள், விழாக்கள் மட்டும் பக்தர்களின்றி நடந்து வந்தது. அதேபோல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஆன்லைன் மூலம் ₹300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் விஐபி டிக்கெட் பெற்றவர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இலவச தரிசனத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனவேதனை அடைந்த பக்தர்கள், இலவச தரிசனத்தில் அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று கடந்த 8ம்தேதி முதல் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டும் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஏழுமலையானை தரிசிக்க தமிழகம் உள்பட வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் விரும்புவார்கள். எனவே இன்று முதல் வெளிமாநில பக்தர்களையும் இலவச தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது.

இதனால் வழக்கமாக வழங்கி வந்த 2 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளை 8 ஆயிரம் டிக்கெட்டுகளாக உயர்த்தி இன்றுமுதல் வழங்கப்படும் என்றும், இதற்கு ஆதார் கார்டு அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இலவச தரிசன டிக்கெட் திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள தேவஸ்தான சீனிவாசா பக்தர்கள் ஓய்வறையில் தினமும் காலை 6 மணி முதல் வழங்கப்படுகிறது. இலவச தரிசன டிக்கெட் பெற நேற்றிரவு முதல் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு நேற்றிரவே தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது.

இன்று காலை முதல் ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரை இரவு 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்றுமுதல் 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தப்பட்டு கோயில் நடை அடைக்கப்படுகிறது. தினமும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள தேவஸ்தான சீனிவாச பக்தர்கள் ஓய்வறையில் தங்களின் ஆதார் அட்டையை காண்பித்து இலவச தரிசன டிக்கெட் பெற்று சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சுமார் 8 மாதங்களுக்கு பிறகு ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்த பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: