டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடி சாலையோர கோயிலுக்குள் புகுந்த கார்; ஒருவர் காயம்; 2 பைக்குகள் சேதம்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்ததில் தறிகெட்டு ஓடி, சாலையோர கோயிலுக்குள்  புகுந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார். 2 பைக்குகள் சேதமாகின. திருவள்ளூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர், நேற்று கரையான்சாவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி காரில் புறப்பட்டார். பூந்தமல்லி டிரங்க் சாலையில் சென்றபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நின்றிருந்த 2 பைக்குகளை இடித்து தள்ளியபடி, அங்குள்ள சாலையோர கோயிலுக்குள் புகுந்தது.

இதில், கோயிலுக்குள் படுத்திருந்த ராஜேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.  அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். காரை ஓட்டிவந்த டிரைவர் பாலச்சந்தர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்தில, அங்கிருந்த ஏணி வாடகை விடும் கடை மற்றும் கோயில் சேதமடைந்தது. தகவலறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்துக்குள்ளான காரை அகற்றினர். இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: