ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 28 கிலோ கஞ்சா பறிமுதல்: வியாபாரி உள்பட இருவர் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக தேனிக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை எழும்பூர் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி காத்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் பையுடன் ரயிலில் வந்து இறங்கினர். அவர்களை பிடித்து விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது, அதில் 28 கிலோ உயர் ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில், தேனியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி ரஞ்சித் குமார் (27) மற்றும் அவரது நண்பர் பிரபாகரன் (23) என தெரியவந்தது. இருவரும் ஆந்திராவில் இருந்து ரயிலில் தேனிக்கு கஞ்சா கடத்தியதும், ரஞ்சித்குமார் மீது 10க்கும் மேற்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: