பாதுகாப்பு விதிகளை மீறிய திருமண மண்டபத்திற்கு சீல்

பெரம்பூர்: சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் நபர்களிடம் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு கேரம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிகப்படியானோர் கூடியுள்ளதாக திருவிக நகர் மண்டல அதிகாரி பரந்தாமனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருவிக நகர் செயற்பொறியாளர் செந்தில்நாதன் தலைமையிலான அதிகாரிகள் அந்த மண்டபத்திற்கு சென்று பார்த்தபோது, சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் இருப்பது தெரிந்தது. அவர்களை வெளியேற வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் வெளியேற மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மண்டபத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர். பின்னர், அந்த நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அதை கட்ட முடியாது என்று வாக்குவாதம் செய்தனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.

Related Stories: