அதிமுக ஊராட்சி தலைவரின் கணவர் கொலை மிரட்டல்: மின் வாரிய பெண் அதிகாரி வீடியோ வௌியீடு

ஒரத்தநாடு: அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை மிரட்டல் விடுவதாக மின்வாரிய பெண் அதிகாரி, சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ வைரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூர் மின்சார வாரியத்தில் வருவாய் மேற்பார்வையாளராக பணியாற்றுபவர் சிவசங்கரி. இவர், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அதில், பின்னையூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் நிரோசாவின் கணவர் பாக்கிஸ்வரன் என்பவர், மின்சார வாரியத்தை ஏமாற்றி ஒரு விளக்கு திட்டத்தில் மின்சார இணைப்பு வாங்கி அதை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அவர் தனக்கு சொந்தமான போர் ஷெட்டுக்கு கொடுத்துள்ள மின் இணைப்பை வீட்டிற்கு மாற்றி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மின்வாரிய அலுவலகத்திற்கு வர விடாமல் வெட்டிக் கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டுகிறார் என தெரிவித்துள்ளார். பெண் அதிகாரி வெளியிட்ட இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: