திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக இலவச தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி முதல் தினந்தோறும் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரம் உள்ளூர் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஏழுமலையானை தரிசிக்க தமிழக பக்தர்கள் ஏராளமானோர் விரும்புவார்கள் என்பதால் இரவு 9.30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று முதல் இரவு 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளது. அதன்பின்னர் 12 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தப்பட்டு கோயில் கதவுகளை அடைக்கப்பட உள்ளது.
மேலும், இலவச தரிசனத்தில் தற்போது தினந்தோறும் வழங்கப்பட்டு வரக்கூடிய 2,000 டிக்கெட்டுகளை 8,000 டிக்கட்டுகளாக தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது. பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண்பித்து பெற்று இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வரவேற்பு வளைவு சாய்ந்தது திருப்பதி பஸ் நிலையம் வழியாக டிப்பர் லாரி நேற்று காலை சென்றது. அப்போது, டிரைவரின் கவனக்குறைவால் லாரியின் பின்பக்க ஹைட்ராலிக் திறந்து கொண்டு மேல் நோக்கி வந்தது. இதில், பக்தர்கள் வரவேற்க தேவஸ்தானம் சார்பில் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு நுழைவு வளைவு லாரியின் பின்பக்கம் சிக்கி கொண்டது. இதனையறியாமல் டிரைவர் லாரியை ஓட்டிச்சென்றார். இதில், நுழைவு வளைவு உடைந்து விழுந்தது.