×

சவாலான பணியில் சாதிக்கும் மங்கை!

நன்றி குங்குமம் தோழி

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.... நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோ மென்று கும்மியடி என முண்டாசு கவிஞன் பாரதி பெண்களுக்கு தைரியும் ஊட்டி பாடிய இந்த பாடலுக்கு இலக்கணமாக திகழ்ந்து வருகிறார் பி.ஏ பட்டதாரி பெண் பிரவீனா சாலமன். சுருக்கமாக சொன்னால் பேய், பிசாசுடன் தான் இவரது வாழ்க்கையே ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம்! சென்னை, புழுதிவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் பணியாற்றி வருகிறார் பிரவீனா சாலமன். சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த இந்த பிரவீனா சாலமனுக்கு வெறும் 35 வயது தான் ஆகிறது. இவரது கணவர் சாலமன், கார் ஓட்டுனர்.

இவர்களுக்கு எஸ்ரா என்ற மகனும், ரித்திக்யா என்ற மகளும் உள்ளனர். பி.ஏ ஆங்கிலத்துடன் செவிலியர் பயிற்சி முடித்த பிரவீணா ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார். இதை தொடர்ந்து அவர் கடந்த 2014ம் ஆண்டு, அண்ணாநகர், வேளங்காடு மின் மயானத்தில் பராமரிப்பாளராக  பணியாற்ற தொடங்கினார். இவரது சேவையை பாராட்டி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சவாலான துறையில் சாதித்த பெண் என்ற விருதை, கடந்த ஆண்டு ஜனவரி, 20ம் தேதி இவருக்கு வழங்கியது. இது குறித்து, பிரவீனா கூறியதாவது, ‘‘இயற்கையில் நான், பயந்த சுபாவம் கொண்டவள்.

தொடக்கத்தில் ஆண்கள் பணிபுரியும் சவாலான மயான பணியில் நான் ஒருத்தி மட்டும் பெண் என்பதால், மயான இருட்டு பயத்தை ஏற்படுத்தியது. கூடவே பேய் பற்றிய பீதியும் கிலியை ஏற்படுத்தியது. என் கணவர் அளித்த ஊக்கம் தான் எனக்குள் இருந்த பயத்தை போக்கி ஒரு தைரியத்தை ஏற்படுத்தியது. எனது பணி இறந்தவர் பற்றிய முழு விவரம் சேகரித்தல், மயானத்துக்கு கொண்டு வரப்படும் சடலத்தின் இறப்பு மருத்துவ சான்றிதழ் சரிபார்த்தல், இது குறித்து மாநகராட்சியில் தகவல் தெரிவிப்பது, மயானத்தை சுத்தமாக வைத்திருப்பது போன்ற பணிகளை செய்து வருகிறேன்.

நான் மயானத்தில் பணிபுரிவது தொடர்பாக தெரிந்து கொண்ட என் உறவினர்கள் ஆரம்பத்தில் என்னை ஏளனமாக பார்த்தனர். சிலர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டனர். அவர்களை பொறுத்தவரை பெண் மயானத்தில் வேலைப் பார்ப்பது ஒரு தவறான செயலாக நினைத்தனர். பின்னர் எனது பணியை பற்றி முழுமையாக தெரிந்த பின், என்னை வெறுத்த அனைவரும் இப்போது பாராட்டி வருகின்றனர். எந்த சூழலிலும், இந்த வேலையை விடமாட்டேன்.

என்னுடைய பணிக்கு கிடைத்த விருது மேலும் எனக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை வேலை நேரம் என்றாலும் சில நேரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சவங்கள் வந்திடும். அதனை எல்லாம் எரியூட்டுவதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து கொடுத்துவிட்டு செல்வேன்’’ என்றவர் குப்பைமேடாக இருந்த மயானத்தின் சுவற்றில் அழகிய சித்திரங்கள் வரைந்து அதன் அமைப்பையே மாற்றி அமைத்துள்ளார்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!