உபி முதல்வர் யோகி பெருமிதம் நாலரை ஆண்டு ஆட்சியில் ஒரு கலவரம் கூட இல்லை

லக்னோ: ‘உத்தர பிரதேசத்தில் கடந்த நாலரை ஆண்டு பாஜ ஆட்சியில், ஒரு கலவரம் கூட நடக்கவில்லை,’ என்று இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் கடந்த 2017ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். தற்போது அவர் நாலரை ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளார். இம்மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால், அதில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான பிரசாரத்தை பாஜ இப்போதே முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில், தனது நாலரை ஆண்டு கால ஆட்சியின் சாதனை புத்தகம் வெளியிட்டு அவர் கூறியதாவது:

கடந்த ஆட்சியின்போது கலவரங்கள் அதிகளவில் நடந்தன. தாதாக்கள், ரவுடிகள் அட்டகாசம் அதிகமாக இருந்தது. பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டம் ஒழுங்கு சீராகி இருக்கிறது. தாதாக்கள், ரவுடிகள்  ஜாதி, மதம் வேறுபாடுகள் பார்க்கப்படாமல் ஒடுக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1800 கோடி மதிப்புகள் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த நாலரை ஆண்டு பாஜ ஆட்சியில், மாநிலம் முழுவதும் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை. எளிதாக வர்த்தகம் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் உத்தர பிரதேசம் 2வது இடம் வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: