மாணவர் சேர்க்கை இல்லை 20 பொறியியல் கல்லூரிகள் மூடல்
சென்னை: மாணவர்கள் சேராத காரணத்தால் 20 பொறியியல் கல்லூரிகள், மேலும் நடத்த முடியாத நிலை இருப்பதாக அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகத்துக்கு தெரிவித்துள்ளன. இதையடுத்து இந்த ஆண்டு 20 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன. தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகள் சுமார் 550 இயங்கி வந்தன. அந்த பொறியியல் கல்லூரிகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால் அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகத்திடம் அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஏஐசிடிஇ அந்தந்த கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும். இந்நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் 22 கல்லூரிகள் ஏஐசிடிஇ விதிகளின்படி இல்லை என்பதற்காக மூடப்பட்டன.
இந்நிலையில், 2021-2022ம் கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற வேண்டும் என்றால் செப்டம்பர் 3ம் தேதிக்குள் பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்து இருந்தது. அதன்படி செப்டம்பர் 3ம் தேதி வரை விண்ணப்பித்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதியை ஏஐசிடிஇ வழங்கியுள்ளது. இந்நிலையில் பொறியியல் படிப்புக்கு மவுசு குறைந்து வருவதாலும், மாணவர்கள் அதில் சேர்வதற்கு ஆர்வம் இன்றி இருப்பதாலும், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேரவில்லை. அதனால் பல கல்லூரிகளில் குறிப்பிட்ட சில படிப்புகளில் மாணவர்கள் சேரவே இல்லை. அதனால் பல கல்லூரிகள் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த விரும்பவில்லை என்று தெரிவித்து, ஏஐசிடிஇக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை. இதற்கிடையே, 2020-2021ம் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக் கழகத்தில் அங்கீகாரம் பெற்று 465 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தின. அவற்றில் அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகள்13, அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகள் 4, மண்டல கல்லூரிகள் 17 அடங்கும். அதேபோல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள் 4, மாநில அரசு பொறியியல் கல்லூரிகள் 10, அரசு உதவி பெறும் கல்லூரிகள் 3 ஆகியவற்றிலும் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்தது. அத்துடன் தனியார் பொறியியல் கல்லூரிகள் 428ல் சேர்க்கை நடந்தது.