அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டில் பொறியியல் படிப்புகளுக்கு சேர்க்கை ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

சென்னை: 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதற்கான தடையாக உள்ள காரணங்கள் குறித்து ஆய்வு செய்யவும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிந்து உரிய தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.

அந்த கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, அதனை செயல்படுத்தும் விதமாக, மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதை போல அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஏனைய தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்ட முடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இதேபோல், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

Related Stories: