×

மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை மாபெரும் போராட்டம்..!

* வீடுகள் முன்பு கருப்புக் கொடி
* நாடு முழுவதும் 10 நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

சென்னை: வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என மக்கள் விரோத ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் நாளை முதல் 10 நாட்கள் தொடர் போராட்டமும் நடத்தப்பட உள்ளது. ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கடந்த மாதம் 20ம் தேதி நடந்தது.

இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தேசிய மாநாட்டு கட்சி, ஆர்ஜேடி, ஏஐயுடிஎப், விடுதலை சிறுத்தைகள், லோக்தன்ரிக் ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆர்எல்டி, ஆர்எஸ்பி, கேரள காங்கிரஸ் (மானி), பிடிபி மற்றும் ஐயுஎம்எல் ஆகிய 19 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய  மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது,  விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலை இல்லாத்  திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது,

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட ஒன்றி பாஜ அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக்  கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை 10 நாட்கள் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘‘மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காத பாஜ அரசால் கூட்டாட்சிக் கொள்கை அழிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது கட்டாயம். அண்மையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நமது ஒற்றுமையைக் கண்டது.

இது இன்னும் வலிவுடையதாக வளரவேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கையினை திமுக முழுமையாக ஆதரிக்கும்’’ என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மக்கள் விரோத-ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து வருகிற 20ம் தேதி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கண்டன போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கடந்த 5ம் தேதி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு,

பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத-ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஒன்றிய பாஜ அரசின் செயல்களைக் கண்டித்து திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் வருகிற 20ம் தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணி அளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஒருங்கிணைந்து போராடுவோம். மதசார்பற்ற-ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 10 மணியளவில் தங்களின் இல்லம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள திமுக மற்றும் கூட்டணி தலைவர்கள் தங்களது கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதால், அவரவர் வீடுகளுக்கு முன் போராட்டம் நடத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

27ல் விவசாயிகள் பாரத் பந்த்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசு செவி சாய்க்காததால், பாஜ ஆளும் மாநிலங்களை குறி வைத்து, அவர்களுக்கு எதிராக பிரசாரத்தை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த கிசான் மகா பஞ்சாயத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், வரும் 27ம் ‘பாரத் பந்த்’ நடத்த அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வரும் 27ம் தேதி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் பாரத் பந்த் நடைபெற உள்ளது.

இந்த பந்துக்கு தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த பந்த் வெற்றியடைய, திமுக ஆதரவு தர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இந்த தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : DMK alliance parties to protest against anti-people union government tomorrow ..!
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...