மேல்மருவத்தூர் ஊராட்சி தலைவர் பதவி லட்சுமி பங்காரு அடிகளார் வேட்பு மனு: ரூ250 கோடிக்கு சொத்து விவரம் தெரிவிப்பு

செய்யூர்: மேல்மருவத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தனது வேட்புமனுவில் 250 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரை எதிர்த்து இதுவரை யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை என்று தெரிகிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார். இவரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார். இவர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவராக உள்ளார்.

கடந்த 10 வருடத்துக்கு முன் மேல்மருவத்தூர் ஊராட்சிமன்ற தலைவராக லட்சுமி இருந்துள்ளார். இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்துக்கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதன்படிசித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு லட்சுமி பங்காரு அடிகளார் கடந்த வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது வேட்பு மனுவில் ரூ.250 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் கோ.ப.செந்தில்குமார் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர்களுக்கு எதிராக இதுவரை யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Stories: