சிறுமிக்கு தொல்லை: வாலிபருக்கு சிறை

திருவொற்றியூர்: சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர், தனது 5 வயது மகளுக்கு அதே பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2013ம் ஆண்டு புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூபாலனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான காவல்துறை சாட்சியங்களையும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து, சென்னை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, நேற்று குற்றவாளி பூபாலனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் ₹5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி  ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹2 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டப்பிரிவின்கீழ் குற்றவாளி பூபாலனை புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: