நாகை மாவட்டத்தில் மீன்களில் கெமிக்கல் வைக்கப்பட்டுள்ளதா? உணவு பாதுகாப்பு துறை ஆய்வு

நாகை: நாகை மாவட்டத்தில் மீன்களில் கெமிக்கல் வைக்கப்பட்டுள்ளதா என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களில் கெமிக்கல் வைத்து பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மீன்வளத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன், மீன்பிடிசட்ட அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று நாகை பாரதிமார்கெட் அருகே உள்ள மீன்விற்பனை செய்யும் இடம், அக்கரைபேட்டை மீன்பிடி இறங்குதளம், புத்துர் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

இதில் விற்பனைக்கு வைத்திருந்த மீன்களின் செதில் பகுதியில் கெமிக்கல் கண்டறியும் அட்டையை பொருத்தினர். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த அட்டையை எடுத்து மீன்களில் கெமிக்கல் சேர்க்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தினர்.

இதை தொடர்ந்து தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் நாகை அண்ணாசிலை அருகே ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு இருப்பது கண்டறியப்பட்டது. 250 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு. சம்பவ இடத்திலேயே ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட் விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

Related Stories: