நாகை: நாகை மாவட்டத்தில் மீன்களில் கெமிக்கல் வைக்கப்பட்டுள்ளதா என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களில் கெமிக்கல் வைத்து பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மீன்வளத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன், மீன்பிடிசட்ட அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று நாகை பாரதிமார்கெட் அருகே உள்ள மீன்விற்பனை செய்யும் இடம், அக்கரைபேட்டை மீன்பிடி இறங்குதளம், புத்துர் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக ஆய்வு நடத்தினர்.