வேட்டவலம்: வேட்டவலம் அண்ணா நகரில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். கால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேட்டவலம் பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்டு அண்ணா நகரில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தாததால், கழிவுநீர் செல்ல வழியின்றி தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அதேபோல், அண்ணா நகர் பகுதிகளில் உள்ள பல தெருகளில் முறையாக கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படாமல் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் அண்ணா நகர் பகுதி பொதுமக்களை உடனடியாக மீட்க போர்கால அடிப்படையில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.