அம்பத்தூர்: அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ஹாலிமா பிவீ (80). இவரது கணவர் 20ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர், தனது 3வது மகன் அப்துல் பாருக் உடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஹலிமா பீவி வீட்டில் தனியாக இருந்தபோது, 30 வயது மதிக்கத்தக்க பெண் பர்தா அணிந்தபடி வந்து, ‘சித்தி வெளியே வாங்க’ என அழைத்துள்ளார். உறவினர்தான் என நினைத்து ஹலிமா பிவீ வெளியே வந்து, அவரை வீட்டிற்குள் அழைத்து சென்று, நீ யார் என விசாரித்துள்ளார். அப்போது, அந்த பெண்மணி தான் வைத்திருந்த டிபன் பாக்ஸில் உள்ள சேமியா பாயாசத்தை எடுத்து ஹலிமா பிவீக்கு கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில், அவர் மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது அந்த பெண்மணி வீட்டில் இல்லை. மேலும், வீட்டு பீரோவில் இருந்த 4 சவரன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.