தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கோயம்பேடு, அண்ணாநகர், கீழ்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் இரவு மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழையும், கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும். வரும் 20, 21ம் தேதியில் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: