எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணி!: சுற்றுச் சூழல் அனுமதியை 6 மாதத்துக்கு நிறுத்திவைத்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!!

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றுச் சூழல் அனுமதி நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அருகே உள்ள எர்ணாவூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்த 450 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட அனல் மின் நிலையம் காலாவதியானதால் கடந்த 2017ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த அனல் மின் நிலையத்திற்கு மாற்றாகவும் மற்றும் விரிவாக்கம் செய்வதாக கூறி கூடுதலாக 2 அனல்மின் நிலைய அலகுகளை அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் திட்டமிட்டது. அதன் அடிப்படையில் 600 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க அலகிற்கு கடந்த 2009ம் ஆண்டு மத்திய சுற்றுச் சூழல் துறையிடம் இருந்து சுற்றுச் சூழல் அனுமதி பெறப்பட்டிருந்தது.

இந்த 2 அனல்மின் நிலைய அலகுகளை அமைக்க 10 ஆண்டுகள் சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி மத்திய சுற்றுச் சூழல் துறையும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சுற்றுச் சூழலுக்கான அனுமதி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அனல்மின் நிலைய விரிவாக்க பணிகள் 703 கோடி ரூபாய் நிர்ணயித்ததுடன் 17 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுச் சூழல் அனுமதி மேலும் 4 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு மின்சாரத்துறை கடிதம் எழுதியிருந்தது. இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்காமல் மத்திய சுற்றுச் சூழல்துறை கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்திட்டத்திற்கு மீண்டும் புதிய சுற்றுச் சூழல் அனுமதி வழங்கியது.

இந்த அனுமதியை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், மக்களிடம் கருத்து கேட்காமல் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கியதாக தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபாலன், எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணி தொடர்பாக இன்னும் 2 மாதத்துக்குள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி 6 மாதத்துக்குள் ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மேலும் அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு வழங்கப்பட்ட சுற்றுச் சூழல் அனுமதியை நிறுத்தி வைக்கப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அனல் மின் நிலைய விரிவாக்க கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்; மின்சார உற்பத்திக்கு அனுமதி இல்லை என்று தீர்ப்பாயம் தெரிவித்திருக்கிறது.

Related Stories: